புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமி வாக்குறுதி தந்து ஓராண்டாகியும் பூட்டிக் கிடக்கும் விடுதிகளை திறக்காதது, பேராசிரியர்கள் பற்றாக்குறையால் சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை இன்று துவக்கியுள்ளனர்.
புதுவை காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இன்று வகுப்புகளை புறக்கணித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தொடர்பாக மாணவர்கள் கூறியது: ”சட்டக் கல்லூரியில் பேராசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதனயைடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பேராசிரியர்களை நியமிக்க வேண்டும், பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று கோரினோம்.

முக்கியமாக, காரைக்கால், மாகே, ஏனாம், தமிழகம் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து படிக்கக் கூடிய மாணவர்கள் தங்கி படிக்க பூட்டிக் கிடக்கும் விடுதியை திறந்து மாணவர்களுக்கு ஒதுக்குமாறு 2 ஆண்டுகளாக கேட்கிறோம். பல போராட்டங்களை நடத்தியபோது, கடந்த ஆண்டு முதல்வர் ரங்கசாமி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 3 மாதங்களில் பேராசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்படும். பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் உட்பட கோரிக்கைளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
ஆனால், ஓராண்டு ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும், தொடர்ந்து 5 ஆண்டுகளாக நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பி பேராசிரியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வகுப்புகளை புறக்கணித்துள்ளோம். இதில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை முற்றுகை போராட்டங்களை நடத்துவோம்” என்றனர்.