பெண் இயக்குனர்கள் என்றாலே பிரச்சனை தான் ; பீஸ்ட் நடிகர் மீண்டும் சர்ச்சை கருத்து

மலையாளத்தில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருபவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. சில வருடங்களுக்கு முன்பு போதைப்பொருள் பயன்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின் விடுதலையான இவர், நடிப்பில் திறமையானவர் என்றாலும் பொதுவெளியில் மனம் திறந்து பேசுகிறேன் என பல சர்ச்சையான கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

தமிழில் இவர் முதன்முதலாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தீவிரவாதிகளில் ஒருவராக நடித்திருந்தார். அந்த படம் வெளியான பின்பு நடிப்புத் திறமை உள்ள தன்னை சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டார்கள் என்று குற்றம் சுமத்தியதுடன் விஜய் போன்ற மிகப்பெரிய ஹீரோ இந்த படத்தின் காட்சிகளை எப்படி கவனிக்காமல் நடித்தார் என்று பேசி பரபரப்பை கிளப்பினார். பின்னர் அப்படி பேசியதற்கு வருத்தமும் தெரிவித்து பின்வாங்கினார்.

இந்த நிலையில் இவர் தற்போது மலையாளத்தில் நடித்துள்ள விசித்திரம் என்கிற படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றபோது, “சினிமா துறையில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கூட சில பிரச்சனைகளும் சங்கடங்களும் இருக்கின்றன.. அதுபற்றி யாரும் பேசுவதில்லை” என்று பேசினார். அப்போது அவரிடம் கேள்வி எழுப்பிய நிருபர் ஒருவர், பெண்கள் குறிப்பாக பெண் இயக்குனர்கள் அதிக அளவில் திரையுலகுக்கு வந்தால் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது அல்லவா ?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஷைன் டாம் சாக்கோ, “அதிக அளவில் பெண் இயக்குனர்கள் வந்தால் பிரச்சினைகளும் அதிகளவில் வரும்.. எங்கேயாவது பெண்கள், குறிப்பாக மனைவிகளும் மாமியார்களும் ஒன்றாக கூடுமிடத்தில் சண்டை இல்லாமல் இருப்பதை பார்த்து இருக்கிறீர்களா. ?” என்று கிண்டலடிக்கும் விதமாக பேசியுள்ளார்.

திரையுலகில் இவரது பேச்சுக்கு இன்னும் எதிர்ப்பு குரல் கிளம்பா விட்டாலும் சோசியல் மீடியாவில் இவரது இந்த சர்ச்சை பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.