நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வு

தேசிய மின் கட்டமைப்பில் 60%மான நீர் மின் உற்பத்தி மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது, மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 78%ஐ எட்டியுள்ளது.

அத்துடன், நேற்று மற்றும் நேற்றுமுன்தினம், நீர் மின் உற்பத்தியில் இருந்து தேசிய மின் கட்டமைப்பிற்கு 60% மின்சாரம் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய மின்சார தேவைகள் வெப்பம், காற்று மற்றும் மின்சார உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, திருத்த பணிகள் காரணமாக கடந்த ஜூன் மாதம் இடைநிறுத்தப்பட்டிருந்த நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரமும் எதிர்வரும் வாரத்தில் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது.

இதனூடாக, தேசிய மின் கட்டமைப்பிற்கு 300 மெகாவோட் மின்சாரம் ஒன்றிணைக்கப்படும். நுரைச்சோலை அனல்மின் நிலையம்  தலா 300 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 03 மின் உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டுள்ளது.

தற்போது இயங்கி வரும் இரண்டு மின் உற்பத்தி இயந்திரங்களினூடாகவும் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும். திருத்தப் பணியில் உள்ள இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரம் கட்டமைப்பில் சேர்க்கப்பட்ட பின்னர் மின் உற்பத்தி நிறுவனம் முழுமையாக செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.