திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் கிராமத்தில் நிம்மாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலையில், இங்கு தினமும் காலை மட்டும் பூஜைகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு கோவிலில் உள்ள இரும்பு கேட்டை கோவிலின் நிர்வாகி கோவிந்தசாமி பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கதவின் பூட்டு திறக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது ஏழு அடி உயரமுள்ள நிம்மாளியம்மன் மரச்சிலையை மர்ம ஆசாமிகள் தீவைத்து எரித்தது தெரியவந்தது. இதனால் சிலை முழுவதும் எரிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி ஆர்.கே.பேட்டை போலீசில் புகாரளித்தார். அந்த புகாரின் படி ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர். நிம்மாளி அம்மன் சிலை தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது