இன்னும் இரண்டு மாதங்களுக்கு அடைமழை தான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற கேள்வி ஓரிரு வாரங்களாக அதிகமாக கேட்கப்பட்டு வந்தது.

இதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் விடை அளித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆந்திரா, ஓடிசாவில் அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் நவம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் தெற்கு கடலோர ஆந்திரா, வட தமிழ்நாட்டில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் மத்தியிலேயே வடகிழக்கு பருவமழை ஆரம்பாகிவிடும். அக்டோபர் 20ஆம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

வடகிழக்கு பருவமழை நவம்பர், டிசம்பரில் பலத்த மழைப்பொழிவை கொடுத்து ஜனவரியில் முற்றிலும் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கத்தைவிட இந்த ஆண்டு மழையின் அளவு அதிகமாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். தென்மேற்கு பருவமழையின் போதும் இம்முறை தமிழகத்தில் பரவலாக நல்ல மழைப் பொழிவு இருந்தது. அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பின. தற்போது மீண்டும் மழை தொடங்கும் நிலையில் அரசு பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் இன்றைய தினம் (அக்டோபர் 29) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.