பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றவர் மீது எதிர்பாராத விதமாக பற்றிய தீ! – திருச்சியில் பரபரப்பு

கடை விவகாரத்தில் தீவைக்க முயன்ற நபர்மீது எதிர்பாராத விதமாக தீப்பற்றிய வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் ஜெயில் பேட்டை ரோட்டில் ரங்கராஜ் என்பவர் கடை வைத்து நடத்தி வருகிறார். மாநகராட்சிக்கு சொந்தமான கடையை அவர் ராஜா என்பவருக்கு உள்வாடகைக்கு விடுவதற்காக ரூ. 1 லட்சம் அட்வான்சாக பெற்றுள்ளார்.
இந்நிலையில் ரங்கராஜனின் சகோதரர்கள் அவருக்கு தெரியாமல் ராஜாவிடம் 5 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே கடையை காலி செய்யச்சொல்லி ரங்கராஜ் கூறியபோது, ராஜா முழு தொகையையும் கேட்டுள்ளார். ஆனால் ரங்கராஜ் ஒரு லட்சம் மட்டுமே தருவதாக கூறியதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
image
இதில் ஆத்திரமடைந்த ரங்கராஜ், ராஜாவை கத்தியால் குத்தியதோடு ராஜா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். அப்போது இன்னொருவர் அவரை தடுத்து சட்டையைப் பிடித்து பின்பக்கமாக இழுத்துள்ளார். இதில், எதிர்பாராத விதமாக ரங்கராஜ் உடலில் பெட்ரோல் கொட்டியதோடு இடது கையில் இருந்த அவரது லைட்டரும் அழுத்தி அவர்மீது தீப்பற்றிக் கொண்டது.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ரங்கராஜை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்திக்குத்தில் காயமடைந்த ராஜாவும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
image
இப்பிரச்னை தொடர்பான வீடியோவும், தீப்பற்றி எரியும் வீடியோவும் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.