கல்லூரி துணை வேந்தர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வுக்கூட வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள கலை, அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 16) ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளில் கல்லூரிகளில் வகுப்பு நடத்தும் திட்டத்தை கொண்டுவந்தது திமுக அரசுதான். மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற நிலை ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில்தான் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 23ஆம் தேதி கல்லூரி துணை வேந்தர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தை உயர் கல்வி துறைதான் நடத்துகிறது. சார்பு வேந்தர் என்ற அடிப்படையில்தான் இந்தக் கூட்டத்தை நான் நடத்துகிறேன்.

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, ஆய்வுக்கூட வசதிகள் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதற்காக தமிழக முதல்வர் ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளார். கல்லூரிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து இன்று கல்லூரி முதல்வர்களுடன் உடனான ஆலோசனையில் கலந்துரையாடி உள்ளோம். கல்லூரிகளில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “4000 பணியிடங்களுக்கான டிஆர்பி தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களும் கலந்துகொள்ளலாம். கௌரவ விரிவுரையாளர்களின் பணி அனுபவத்தின் அடிப்படையில் வருடத்திற்கு 2 மதிப்பெண்கள் வீதம், ஏழரை ஆண்டுகள் பணி அனுபவமுள்ள கௌரவ விரிவுரையாளர்களாக இருந்தால் 30 மதிப்பெண்களுக்கான நேர்முகத் தேர்வில் 15 மதிப்பெண்கள் முழுமையாக கொடுக்கப்படும். நேர்முகத் தேர்வின் மொத்த மதிப்பெண்களே 30 தான்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.