ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 5ம் தேதி தங்கச்சிமடம் கிறிஸ்டோபர், அந்தோணி ராயப்பு ஆகியோருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகுகளில் ஒரு சிறுவன் உள்ளிட்ட 15 மீனவர்கள் பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடிக்க சென்றனர். இரவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் 15 பேரையும் படகுகளுடன் சிறைபிடித்து சென்றனர். தலைமன்னார் நீதிமன்ற உத்தரவுப்படி, மீனவர்கள் இலங்கையில் உள்ள வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களை நேற்று தலைமன்னார் நீதிமன்றத்தில் இலங்கை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி, 15 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
