சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம், விழாவின் 7வது நாளான இன்று (ஏப்ரல் 28) மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை முதலே சோளிங்கர் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் பக்தர்களின் “கோவிந்தா! கோவிந்தா” எனும் நாம முழக்கங்கள் எதிரொலித்தன. தேரோட்டத்தை முன்னிட்டு, உற்சவர் பக்தோசிதப் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் சிறப்பு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும் தாயார்களுக்கும் பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் போன்ற பல்வேறு வகையான நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.