உலகக் கோப்பை கால்பந்து: "ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி"- காயம் காரணமாக விலகிய கரீம் பென்சிமா டுவீட்

தோகா,

உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்குகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் தேதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 மைதானங்களில் போட்டி நடக்கிறது.

இந்த போட்டியில் 5 முறை சாம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜெர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டினா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன. இதன் முதலாவது ஆட்டத்தில் கத்தார்-ஈகுவடார் அணிகள் மோதுகின்றன.

கோப்பையை தக்க வைக்கும் முனைப்புடன் இந்த தொடரில் களமிறங்கியுள்ள பிரான்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். இடது தொடையில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகுவதாக பிரான்ஸ் கால்பந்து அணி தெரிவித்துள்ளது.

34 வயதான கரீம் பென்சிமா பிபா தரவரிசையில் மெஸ்ஸிக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 கோல்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டுக்கான கால்பந்து உலகில் மிக உயரிய விருதான “பாலன் டி ஆர் விருது” கரீம் பென்சிமா வென்று இருந்தார்.

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளது குறித்து கரீம் பென்சிமா மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ” என் வாழ்க்கையில், நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்தது இல்லை. ஆனால் எப்போதும் போல அணிக்கு எது சிறந்தது என்பதை பற்றி நான் இன்று சிந்திக்க வேண்டும். எனவே எங்கள் அணிக்கு ஒரு சிறந்த உலகக் கோப்பையை உருவாக்க உதவக்கூடிய ஒரு வீரருக்கு என் இடத்தை நான் விட்டு கொடுத்தாக வேண்டும். ரசிகர்களாகிய உங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.