வீரப்பன் வெப் தொடருக்கு விதித்த தடை நீக்கம்

ராஜீவ் கொலையாளிகள் பற்றி குப்பி என்ற படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர். ரமேஷ், சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வனயுத்தம் என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். அவர் தற்போது வீரப்பனின் கதையை 'வீரப்பன் : ஹங்கர் பார் கில்லிங்' என்ற பெயரில் வெப் தொடராக இயக்கி வருகிறார்.

இந்த தொடருக்கு தடைகேட்டு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் வீரப்பன் வெப் தொடருக்கு இடைக்கால தடை விதித்து. இதனால் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த தடையை நீக்கியதோடு முத்துலட்சுமி தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது.

இதுகுறித்து ஏ.எம்.ஆர் ரமேஷ் கூறியிருப்பதாவது : வன யுத்தம் படத்தில் வீரப்பன் வாழ்க்கை கதையை முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. நிறைய காட்சிகளை தணிக்கை குழுவினர் நீக்கிவிட்டனர். இதனால்தான் வீரப்பன் கதையை வெப் தொடராக எடுக்கிறேன். 20 எபிசோட்களை கொண்ட தொடராக இது தயாராகிறது. வெப் தொடருக்கு தணிக்கை இல்லை என்பதால் வீரப்பனின் முழு வாழ்க்கையையும் தொடரில் கொண்டு வருவேன்.

இந்த தொடரில் வீரப்பன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த தொடர் வெளிவரும். வனயுத்தம் படத்திற்கு எதிராக முத்துலட்சுமி உச்சநீதிமன்றம் வரை சென்றார். உச்சநீதிமன்றம் அவருக்கு 25 லட்சம் இழப்பீடு தொகை கொடுக்க உத்தரவிட்டது. நானும் அதை கொடுத்துவிட்டேன். இதன் மூலம் வீரப்பன் கதையை படமாகவோ, தொடராகவோ எப்படி வேண்டுமானாலும் படமாக்க எனக்கு உரிமை இருக்கிறது. அதனால்தான் இப்போது முத்துலட்சுமி தொடர்ந்து வழக்கையும் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இதுவரை 6 எபிசோட்களின் பணி முடிந்திருக்கிறது. அடுத்த வாரம் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.