தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக ஒடிசா ஆளுநர் கணேஷி லால் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது!
பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஆளுநரின் அசைவுக்கு ஏற்ப மாநில அரசு செயல்பட வேண்டும் என மத்திய பாஜக அரசு எதிர்பார்க்கிறது. சமீபத்தில் மேற்கு வங்க ஆளுநராக கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த கொள்கை வகுப்பாளரரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர்.சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் ஆர்.என் ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே பல்வேறு முரண்பாடுகள் எழுந்துள்ளது. சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. சமீபத்தில் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை.
மேலும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இந்து மதம் மற்றும் சனாதன தர்மம் குறித்து பல்வேறு கருத்துகளை பொது மேடையில் பேசுவதால் திமுக மற்றும் திராவிட கட்சிகள் அவர் மீது பல்வேறு விமர்சனங்களையும் குற்றசாட்டுகளையும் முன்வைக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் ஆளுநரை திரும்ப பெற கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு குடியரசு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு திடீரென புறப்பட்டு சென்றார். அவர் டெல்லியில் உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அளுநர் ரவி தமிழகம் திரும்பிய பிறகும் டெல்லி பயணம் குறித்தான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் மத்திய அரசு இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நீக்கிவிட்டு ஒடிசா ஆளுநராக இருக்கும் பேராசிரியர் கணேஷி லால் தமிழக ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்படலாம் என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் மத்திய அரசிடம் இருந்து வெளியாகவில்லை. எனினும் கூடிய விரைவில் மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.