அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் மற்றும் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணையை தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. அவற்றில் கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்துக்குள் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய திட்டமிடப்பட்டது. இதற்கான கலந்தாய்வு கால அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி, பணிநிரவல் கலந்தாய்வு முதுநிலை ஆசிரியர்களுக்கு நாளையும் (நவ. 29-ம் தேதி), பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிசம்பர் 9-ம் தேதியும் எமிஸ் தளம் வழியாக நடைபெற உள்ளது. அரசுப் பள்ளி பகுதிநேர ஓவிய ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு டிசம்பர் 7-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
கலந்தாய்வு, முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டமும் நடைபெறும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ள பகுதிநேர ஆசிரியர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும். ஓர் இடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், பணியில் சேர்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை தருமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.