தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எம்.ஏ.காந்திமதிநாதன் என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ”தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் உற்பத்தியாகி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வழியாக மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. இது ஒரு வற்றாத ஜீவ நதியாகும்.
தாமிரபரணி என்பது ஒரு வடமொழிச் சொதாக்கும். இதன் தமிழ் பெயர் பொருநை நதியாகும். திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், மங்கல நிகண்டு, முக்கூடற்பள்ளு, உள்ளிட்ட பல தமிழ் இலக்கியங்களில் தாமிரபரணி பொருநை நதி என்றே அழைக்கப்படுகிறது.
பல்வேறு அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் தமிழறிஞர்கள் இதனை பொருநை நதி என்று உறுதிப்படுத்தியுள்ள நிலையில், கி.பி.1011 ஆண்டில் பொறிக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலும் பொருநை நதி என்ற பெயரே உள்ளது. இதனால் தாமிரபரணி நதியின் பெயரை பொருநை நதி என்று மாற்றம் செய்வதற்கு உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததில், பன்னிரண்டு வாரங்களில் உரிய முடிவெடுப்பதற்கு தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.