சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு 18 நாளில் 10 லட்சம் பேர் தரிசனம்

திருவனந்தபுரம்: மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்த 16ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்குள் மட்டுமே 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்று முதல் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களான வெள்ளி முதல் ஞாயிறு வரை கட்டுக்கடங்காத வகையில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தினமும் சராசரியாக 60 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் வரை பக்தர்கள் சபரிமலை வருகின்றனர்.

கடந்த 1ம் தேதி 63,460 பேரும், நேற்று முன்தினம் 73,297 பேரும் தரிசனம் செய்தனர். நேற்று 71,515 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் பெரும்பாலான பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 16ம் தேதி மாலை முதல் நேற்று காலை வரை சபரிமலையில் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதை தொடர்ந்து கடந்த இரு வருடங்களை விட இவ்வருடம் சபரிமலை கோயில் வருமானம் பல மடங்கு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.