அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு தேசிய ஆசிரியர் நல நிதியிலிருந்து தொழிற்கல்வி பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2022 – 2023-ம் கல்வி ஆண்டிற்கு படிப்புதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்தத் தகவலை அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் உடனடியாக சுற்றறிக்கை மூலம் அறிவித்து படிப்புதவித் தொகை பெற விரும்பும் ஆசிரியர்கள் 31.12.2022க்குள், ஆணையர், பள்ளிக்கல்வி, டி.பி.ஐ வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை-06 என்ற முகவரிக்கு நேரடியாக அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த கல்வி உதவித்தொகை கோரும் ஆசிரியர்கள் குறைந்தது 10 வருடங்கள் பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும். ஆசிரியர்களின் குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட உயர் கல்வி நிறுவனத்தில் தொழில் படிப்புகளை படிப்பவராக இருக்க வேண்டும்.
ஆசிரியர்களின் ஆண்டு வருமானம் 7.2 லட்சத்துக்குள் இருப்பதோடு, தங்களுடைய பணி மற்றும் ஊதிய விவரங்களையும் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் இறந்து போன ஆசிரியர்களின் பிள்ளைகளும் இந்த உதவி தேவை பெற விண்ணப்பிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.