ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரத்தை பறித்த மாவட்ட ஆட்சியர்; திரண்டு வந்த கிராம மக்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் ஊராட்சியில் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வரும் நிலையில்,நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக தமிழ் அமுதன் என்பவர் செயல்பட்டு வருகிறார். அவர் உள்ளாட்சி சட்ட விதிகளை மீறி நிதி மேலாண்மையை தவறாக கையாண்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை நிர்வகிக்கும் அதிகாரத்தை பறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இத்தகைய நடவடிக்கையால் ஆதனூர் ஊராட்சி மன்ற கிராம மக்களுக்கு தேவையான அன்றாட நடவடிக்கைகளை ஊராட்சி மன்ற தலைவரால் கவனிக்க முடியவில்லை. இதனால், கிராம மக்கள் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆதனூர் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டவர்கள் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் சென்றனர். அங்கு நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவரின் அதிகாரப் பறிப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தியிடம் வழங்கினார்கள்.

ஆதனூர் கிராம மக்களின் மனுக்களின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உறுதி அளித்தார். அதன்பேரில் ஆதனூர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டிருந்தனர் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.