சென்னை: பொதுமக்கள் மின்இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதாக இணைக்கும் வகையில், மேலும் ஒரு இணையதளத்தை மின்வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால்தான் ஆன்லைனில் மின்கட்டணம் செலுத்த முடியும் என்ற நிலையும் உள்ளது. இதற்காக, கடந்த மாதம் 28-ம் தேதி முதல் வரும் டிச.31-ம் தேதி வரை சிறப்பு முகாமை மின்வாரியம் நடத்துகிறது. தமிழகம் முழுவதும் 2,811 மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்பட்டு வருகின்றன.
மின்வாரியத்தின் இணையதளம் மூலமாக ஆன்லைனிலும் ஏராளமானோர் ஆதாரை இணைத்து வருகின்றனர். இதற்காக, https://adhar.tnebltd.org/Aadhaar என்ற இணையதள முகவரி வெளியிடப்பட்டது. நாளுக்கு நாள் ஆதார் எண்ணை இணைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சில நேரங்களில் சர்வரின் திறன் குறைந்து, இணைப்பு கிடைக்காத நிலை உள்ளது.
இந்நிலையில், மின்இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்காக bit.ly/linkyouraadhar என்றபுதிய இணையதள லிங்க் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தவிர, ஆதார் அட்டை நகலைபதிவேற்ற வேண்டியது இல்லை.ஆதார் எண்ணை பதிவு செய்தால்போதும் என்று மின்வாரிய அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.