
ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த ஜோதி என்பவர் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தனர். ஜோதிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தனது 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு அஞ்சனாத்ரி மலைப்பகுதிக்கு ஜோதி நேற்று வந்தார். அங்கு தனது இரண்டு குழந்தைகள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீவைத்தார். இதன் பின் ஜோதி, தலையில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றார். அப்போது அவ்வழியதாக வந்தவர்கள், தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பெட்ரோல் வைத்து எரித்ததில் ஒரு குழந்தை உடல் கருகி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை கவலைக்கிடமான நிலையில் இருந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொரு குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜோதியை கைது செய்த போலீசார், எதற்காக குழந்தைகளுக்கு தீ வைத்தார் என்று தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.