உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் போக்சோ வயது வரம்பு குறித்து பரிசீலிக்க வேண்டும்

புதுடெல்லி: ‘போக்சோ சட்டத்தில் வயது வரம்பு தொடர்பான சிக்கல்களை தீர்ப்பது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வலியுறுத்தி உள்ளார். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டம் குறித்த 2 நாள் தேசிய கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. கூட்டத்தை தொடங்கி வைத்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது: குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் மறைக்கப்படும் பிரச்னையாகவே உள்ளது.

இந்த மவுன கலாச்சாரம் மாற வேண்டும். தவறு செய்தவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும், அதைப் பற்றி புகாரளிக்க குடும்ப உறுப்பினர்கள் முன்வர வேண்டும். இதுதொடர்பாக அரசும் பிற பங்குதாரர்களும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, குடும்ப கவுரவம் என்ற பெயரில் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதியை மூடி மறைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டிய அவசர தேவை தற்போது உள்ளது. போக்சோ சட்டத்தில் வயது வரம்பு தொடர்பான கவலைகளுக்கு தீர்வு காண நாடாளுமன்றம் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.