தந்தையைக் கொன்று 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய மகன்; போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில், 21 வயது இளைஞன் ஒருவன் தன்னுடைய தந்தையைக் கொலைசெய்து, அவர் உடலை 30 துண்டுகளாக வெட்டி ஆழ்துளை கிணற்றில் வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மாந்தையார் நெடுஞ்சாலை அருகே கடந்த டிசம்பர் 6-ம் தேதியன்றே நடந்திருந்தாலும்கூட நேற்று மாலைதான் வெளியில் தெரியவந்திருக்கிறது.

கொலை

முன்னதாக கொலைசெய்யப்பட்ட பருஷ்ராம் (54) வீடு திரும்பாததன் காரணமாக, அவரின் மனைவி கடந்த 8-ம் தேதி போலீஸில் புகாரளித்திருக்கிறார். பின்னர் இதில் குடும்பத்தாரிடம் போலீஸார் முதற்கட்ட விசாரணை நடத்தியதில், பருஷ்ராமின் மகன் வித்தல் என்பவர்தான் குடிபோதையிலிருந்த தன் தந்தையை மாந்தையார் நெடுஞ்சாலை அருகே அழைத்துச்சென்று கம்பியால் தலையில் அடித்து கொலைசெய்தார் என்பது தெரியவந்தது. மேலும் வித்தல், தன் தந்தையின் உடலை அங்கேயே 30 துண்டுகளாக வெட்டி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் வீசியிருக்கிறார். இதனை வித்தல் போலீஸாரிடம் தாமாகவே ஒப்புக்கொண்டார்.

போலீஸ்

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய பாகல்கோட் எஸ்.பி ஜெயபிரகாஷ், “குடிப்பழக்கத்துக்கு அடிமையான பருஷ்ராமின் ஐந்தாவது மகன் வித்தல். பருஷ்ராம் தினமும் தன் மனைவி உட்பட குடும்ப உறுப்பினர்களுடன் சண்டைபோட்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகத்தான் விரக்தியில் வித்தல் இத்தகைய செயலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு கொடூரமான குற்றத்தைச் செய்த பிறகும் வித்தல் சாதாரணமாகத் தெரிந்தார். அதுமட்டுமல்லாமல் விசாரணையின்போது வித்தல், தன் தந்தையைக் கொன்றதில் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினார்” எனத் தெரிவித்தார். தற்போது, பருஷ்ராமின் உடலை அவரின் மனைவியும், குடும்பத்தினரும் அடையாளம் கண்டதையடுத்து, போலீஸார் அதனை உறுதிப்படுத்த தடயவியல் பரிசோதனை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.