கொலைகள் நடப்பதற்கு என்று வலுவான காரணங்கள் இருக்க வேண்டும் என்று விதி ஏதும் கிடையாது என்ற கூற்று பொதுவாக கூறப்படும். அதாவது, ஒரு குறிப்பிட்ட சூழலும், மனநிலையும்தான் கொலை செய்யவும், தற்கொலை மேற்கொள்ளவும் தூண்டும் என கூறப்படும் நிலையில், அந்த ஒரு நொடியை கடந்து, அதிலிருந்து முற்றிலும் விடுபட முயல வேண்டும் என்பதே உளவியல் அறிஞர்களின் அறிவுரையாக உள்ளது.
ஆனால், மனிதர்கள் உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே பாதிக்கும் அளவிற்கு கடும் பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும், குற்றங்கள் அதிகம் நடைபெற ஒரு ஊக்கியாக போதை வஸ்துக்கள் செயலாற்றி வருகின்றன என்பது பல்வேறு வழக்குகளின் விசாரணையில் தெரியவருகிறது. தற்போது, நாட்டையே உலுக்கிய டெல்லி ஷரத்தா கொலை வழக்கில் கூட, கொலைசெய்த அஃப்தாப் கஞ்சா போதையில்தான் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.
எனவே, இதுபோன்ற போதை வஸ்துக்களை மக்களிடம் சென்று சேராமல் இருக்க அரசு அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், அதன் கண்ணிகளை முற்றிலுமாக அறுக்க இயலவில்லை என்றே கூற வேண்டும். அதிகாரிகள் போதை சார்ந்த ஒரு வழியை அடைத்தால், போதைக்கு அடிமையானவர்கள் அதற்கான மாற்றவழிகளை நாடுகின்றனர். உதாரணமாக, நேற்று முன்தினம், பிகாரில் கள்ளச்சாராயம் அருந்தி ஏறத்தாழ 39 பேர் உயிரிழந்த சம்பவத்தை கூறலாம். அதேபோன்று, போதைக்கு அடிமையான ஒரு நண்பர் கூட்டம், உச்ச போதையில் உணர்ச்சிவசப்பட்டு செய்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரி மாவட்டத்தில்தான் அந்த அதிர்ச்சிக்குள்ளாக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பைகுந்தபூர் காட்டுப்பகுதியில் ராம்பிரசாத் சாஹா என்பவரின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சாஹாவின் நண்பர்களே அவரை கொலை செய்திருப்பதை கண்டுபிடித்து, இரண்டு பேரை போலீசார் கைதுசெய்தனர்.
போலீசாரின் விசாரணையில், உயிரிழந்த சாஹா போதைக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது. அவர் காட்டில் கிடைக்கும் பிரத்யேக போதை பொருளை உபயோகிக்க அடிக்கடி காட்டுப்பகுதிக்குச் செல்வார் எனவும் கூறப்படுகிறது. அதேபோன்று, கடந்த திங்கட்கிழமை (டிச. 12) அன்றும் சாஹா தனது இரு நண்பர்கள் சுபத்ரா தாஸ் (22), அஜய் ராய் (24) ஆகியோருடன் காட்டுபகுதிக்குச் சென்றுள்ளார்.
அனைவரும் போதை வஸ்தை பயன்படுத்தினர். இதில், சாஹாவுக்கு போதை தலைக்கேறியவுடன், அடுத்து போதை பொருள் வாங்க அவரிடம் பணம் இல்லை. இதையடுத்து, தனது நண்பர் சுபத்ரா தாஸிடம், போதை பொருள் வாங்க 10 ரூபாய் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், சுபத்ரா தாஸ் கற்களை கொண்டு சாஹாவை பலமாக தாக்கி கொலை செய்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு போலீசார் சுபத்ரா தாஸ், அஜய் ராய் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இதுகுறித்து சுபத்ரா தாஸ், 10 ரூபாய் பணத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையில், எனது நண்பரை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார். இந்த கொலையில் மற்றொரு நண்பர் அஜய் ராய்க்கு என்ன தொடர்பு என்பது குறித்து போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.