பெற்ற மகளின் வாழ்க்கையை விட ஜாதி தான் முக்கியமா ?

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா தக்கோட்டா கிராமத்தில் வசித்து வந்தவர் புஜபலி கர்ஜகி (34). இவரும், அதேகிராமத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் இருவரும் வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் பாக்யஸ்ரீயின் தந்தை தம்மனகவுடா பட்டீல் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாக்யஸ்ரீ, புஜபலியை பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி இரவு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு புஜபலியும், அவரது உறவினரான சுமேத் என்பவர் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது காரில் வந்த தம்மனகவுடா மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் புஜபலியையும், சுமேத்தையும் 4 பேரும் தாக்கினர். அப்போது சுமேத் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். புஜபலியை சூழ்ந்து கொண்ட 4 பேரும் அவரது கண்ணில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் கத்தியால் புஜபலியை 4 பேரும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த புஜபலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஜமகண்டி போலீசார் புஜபலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் காதல் திருமணம் செய்ததால் புஜபலியை, பாக்யஸ்ரீயின் தந்தை ஆணவ கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஜமகண்டி போலீசார் தம்மன்னகவுடாவை கைது செய்து உள்ளனர். அவரது உறவினர்கள் 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.