கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரிப்பு: முக்கிய சாலைகளில் கூட்டமாக திரண்டதால் பரபரப்பு..!!

திண்டுக்கல்: கொடைக்கானல் குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் வத்தலகுண்டு பிரதான சாலை பகுதியில் காட்டெருமை கூட்டம் சாலையை மறைத்து நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது. கொடைக்கானலில் கடந்த சிலமாதங்களாகவே மனித – மிருக மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இந்த காட்டெருமை பொறுத்தவரையில் காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக நகர்ப்புறங்களில் இருக்க கூடிய அண்ணாசாலை மற்றும் கொடைக்கானல் வத்தலகுண்டு பிரதான சாலைகளில் வளம் வந்துகொண்டு இருக்கின்றது.

இன்று இந்த காட்டெருமைகள் கூட்டமானது கொடைக்கானலில் அதிகமான மக்கள் வசிக்கக்கூடிய உகார்ஜீ நகர் பகுதியில் முகாமிட்டிருந்தது. இதனை தொடர்ந்து வத்தலக்குண்டு செல்லக்கூடிய பிரதான சாலையில் காட்டெருமை கூட்டம் இருபுறம் இருக்கக்கூடிய வாகனங்களை மறித்ததால் ஒரு மணி நேரத்திற்கு போக்குவரத்து முழுவதுமாக பாதிக்கப்பட்டது.

 கடந்த 10 நாட்களில் மட்டும் இந்த காட்டெருமையால் 3க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்டெருமைகளை நிரந்தரமாக வனத்துக்குள் விரட்ட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நகர்ப்பகுதிகள் மட்டுமின்றி  கிராமப்பகுதிகளிலும் இந்த காட்டெருமைகள், காட்டுயானைகளால் தொடர்ந்து மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.