ஆ.ராசா பினாமி நிறுவனத்தின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்து முடக்கம்… அமலாக்கத் துறை அதிரடி!

திமுக எம்பி ஆ.ராசா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் (2004 முதல் 2007 வரை) குருகிராமில் (மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றான) ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதிகளை வழங்கியுள்ளார். இதற்கு பிரதிபலாக, ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்துக்கு குறிப்பிட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம், பெரிய அளவில் கைமாறு செய்திருந்தாக அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரிய வந்தது.

குறிப்பிட்ட அந்த நிறுவனம் தொடக்கத்தில் இருந்து எந்த ஒரு வணிக நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதும், ஆராசாவின் பினாமி நிறுவனத்துக்காக கோவை மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட்ட 45 ஏக்கர் நிலம், குருகிராமில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் கைமாறாக கொடுத்த தொகையில் பெறப்பட்டது என்பதும் அமலாக்கத் துறை விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்தின் பெயரில் கோவை மாவட்டத்தில் வாங்கப்பட்ட 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை தற்காலிகமாக முடக்கி அமலாக்கத் துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, 2004-07 காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஆ. ராசா முறைகேடாக சுற்றுசூழல் அனுமதி வழங்க லஞ்சமாக பெற்ற பணத்தில் பினாமி நிறுவனத்தின் பெயரில் ரூ.55 கோடி மதிப்பீட்டில் நிலம் வாங்கி உள்ளதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி இருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2 ஜி அலைக்கற்றை முறைகேடு விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி தனித் தொகுதியில் போட்டியிட்டு தற்போது திமுக எம்பி ஆக பதவி வகித்து வருகிறார். திமுக துணைப் பொதுச் செயலாளராகவும் அவர் இருந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் இவர், சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், இந்துகள் குறித்து மனுதர்மத்தில் மிகவும் மோசமாக சொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு பேசிய விஷயம் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

தமிழக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்வினை ஆற்றின. அதன் பின் கடந்த சில மாதங்களாக ஆ.ராசா, சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதாக தெரியவில்லை. இத்தகைய சூழலில் அவரது பினாமி நிறுவனத்தின் சொத்து எனக்கூறி, 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத் துறை முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.