பொய்கை மாட்டுச்சந்தைக்கு பெரியம்மை நோய் தாக்குதல் காரணமாக மாடுகள் வரத்து குறைந்தது: மழையால் சேறும் சகதியாக மாறியதால் அவதி

வேலூர்: பொய்கை மாட்டுச்சந்தைக்கு பெரியம்மை நோய் தாக்குதல் காரணமாக இன்று மாடுகள் வரத்து குறைந்தது. மேலும் மழையால் சந்தை சேறும் சகதியாக மாறியதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகினர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பொய்கை மாட்டுச்சந்தைக்கு மாடுகள் விற்பனை சற்று அதிகரித்த நிலையில் இருந்தது. ஆனால் தற்போது மாடுகளை தாக்கும் பெரியம்மை நோய் அதிகளவில் பரவி உள்ளது. இதனால் மாடுகள் பலியாகி வருகிறது. இதனால் மாடுகள் வாங்க விவசாயிகள் முன்வரவில்லை. இந்நிலையில் இன்றும் கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால் வியாபாரிகளும், விவசாயிகளும் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. மேலும் விலையும் சற்று குறைந்தும் உள்ளது. இதற்கிடையில் மாட்டு சந்தை முழுவதும் சேறும் சகதியாக மாறியுள்ளது.

இதனால் வியாபாரிகள், விவசாயிகள் அவதிக்கு ஆளாகினர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பல்வேறு மாவட்டங்களில் மாடுகளை பெரியம்மை நோய் தாக்கி உள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் நோய் தாக்குதல் காரணமாக மாடுகள் இறந்துவிடுகிறது. இதனால் மாடுகளை விவசாயிகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரவில்லை. விற்பனைக்கு கொண்டு வந்தால் மாடுகளுக்கு நோய் தொற்று ஏற்படும் என்று அச்சப்படுகின்றனர். விலையும் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. வர்த்தகத்தை பொறுத்தவரை பெரிய அளவில் இல்லை. என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.