
அஞ்சலகத்தில் தொடர் வைப்புத்தொகை, நிலையான வைப்புத்தொகை, பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் திட்டம், மாதாந்திர சேமிப்புத்திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி ( பிபிஎஃப்), தேசிய சேமிப்புப் பத்திரம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டம் என பல சிறு சேமிப்புத்திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
ஒவ்வொரு திட்டங்களுக்கும் ஒவ்வொரு விதமான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ச்சியாக இரண்டாவது காலாண்டாக அதிகரிக்கப்படும். ஆனால் சில திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் ஒன்பது காலாண்டுகளுக்கு மாற்றி அமைக்கப்படாது.
இந்நிலையில் தற்போது சிறு சேமிப்புத்திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டு அடிப்படையில் மதிப்பாய்வு செய்த பிறகு, தபால் நிலையங்களில் ஒரு ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 6.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், இரண்டு ஆண்டுகளுக்கு 6.8 சதவிகிதமும், 3 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 6.9 சதவீதம் மற்றும் 5 ஆண்டுகளுக்கான வட்டி விகிதம் 7 சதவிகிதம் என்ற அளவிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது டிசம்பர் இறுதியில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த வட்டி விகிதமானது 2023இன் முதல் மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகித மாற்றமானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் உள்பட அனைத்து சிறு சேமிப்புத்திட்டங்களின் வட்டி விகிதம் உயர்ந்துள்ளது.
newstm.in