தமிழில் சின்னத்திரை தொடர்களில் நடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர் மலையாள நடிகை பிரவீணா. மலையாள திரையுலகில் அழகான அம்மா கதாபாத்திரம் என்றால் முதல் சாய்ஸ் இவராகத்தான் இருக்கிறார்.
கடந்த 25 வருடங்களுக்கு மேலாக மலையாளம் மற்றும் சமீப காலமாக தமிழ் திரையுலகில் நடித்து வரும் இவர், கடந்த வருடம் திருநெல்வேலியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
அதில், தன்னுடைய புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவற்றை தன்னை சார்ந்தவர்களுக்கும் மற்றும் சோசியல் மீடியாவிலும் பதிவிட்டு வருகிறார் என குற்றம் சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பாக்கியராஜ் என்பவர் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், ஒரு மாதம் முடிவதற்குள்ளாகவே ஜாமீனில் வெளியே வந்த அவர் தற்போது தனது மகள் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து தன்னை சேர்ந்தவர்களுக்கு அனுப்பி வைத்து மீண்டும் தன்னுடைய குடும்பத்தின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் என குமுறுகிறார் பிரவீணா.
சமீபத்தில் இவரது மகள், சம்பந்தப்பட்ட பாக்கியராஜ் என்பவர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுபற்றி திருவனந்தபுரம் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் ஷாஜி கூறும்போது, “சம்பந்தப்பட்ட பாக்கியராஜ் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக தானும் தற்போது தனது மகளும் இப்படி சைபர் தாக்குதலுக்கு ஆளாகி மிகுந்த துயரத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் சம்பந்தப்பட்டவர் மீது புகார் அளித்தும் ஒரு நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் பிரவீணா.