மனைவியை கொன்று, வீட்டு முற்றத்தில் புதைத்துவிட்டு நாடகம்… ஒன்றரை ஆண்டுக்குப்பின் சிக்கிய கணவன்!

கேரள மாநிலம் கொச்சி பகுதியைச் சேர்ந்தவர் சஜீவன்(45). இவர் தனது மனைவி ரம்யா(35) காணாமல் போனதாக கடந்த மாதம் போலீஸில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ரம்யாவை அவரின் கணவன் சஜீவன் கொலை செய்து புதைத்துவிட்டு காணாமல் போனதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “சஜீவனுக்கும் ரம்யாவுக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மனைவி ரம்யாவின் நடத்தையில் சஜீவனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக மனைவி ரம்யாவிடம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி வாக்குவாதம் செய்துள்ளார் சஜீவன். வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த சஜீவன் கயிற்றால் ரம்யாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பகல் நேரத்தில் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த கொலை நடந்ததால் அவரின் உடலை வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

பின்னர் இரவு நேரத்தில் வீட்டு முற்றத்தில் குழிதோண்டி மனைவியின் உடலை புதைத்துள்ளார். தனது அம்மாவை தேடிய குழந்தைகளிடம், `அம்மா வேறொருவருடன் சென்றுவிட்டார். அதை வெளியே சொன்னால் நமக்கு அவமானம் என்பதால் பெங்களூருக்கு படிக்க போயிருப்பதாக வெளியில் சொல்ல வேண்டும்’ எனவும் கூறி பிள்ளைகளை நம்ப வைத்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சஜீவன்

இந்த நிலையில் ரம்யா எங்கே என அவரின் உறவினர்களும் கேட்டுள்ளனர். அதற்கு, பியூட்டீசியன் படித்துள்ள ரம்யா பெங்களூருவில் படிக்கபோனதாகவும், அங்கிருந்து வளைகுடா நாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டதாக்கவும் கூறி சமாளித்துள்ளார். ஆனால், ஓராண்டுக்கு மேல் ஆன பின்னரும் ரம்யா யாரிடமும் போனில்கூட பேசவில்லை, அவரைப்பற்றி எந்த தகவலும் இல்லாததால் உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் சஜீவனிடம் மனைவி பற்றி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளார்கள்.

இதனால் மனைவி ரம்யா வேறொருவருடன் பழக்கம் ஏற்படு, அவருடன் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார் என உறவினர்களிடம் கூறியதுடன், அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொச்சியில் இருந்து இரண்டு பெண்களை பத்தனம்திட்டாவுக்கு அழைத்துச் சென்று நரபலி கொடுத்த சம்பவத்துக்கு பிறகு கணாமல்போன பெண்கள் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தினோம்.

ரம்யா சஜீவன்

அதன்படி ரம்யா குறித்து அவரின் குழந்தைகளிடமும், கணவர் சஜீவனும் விசாரணை நடத்தினோம். அதில் எங்களுக்கு சில சந்தேகங்கள் ஏற்பட்டது. இதையடுத்து கணவன் சஜீவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். ரம்யாவின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சஜீவனை கைது செய்து விசாரணை நடத்திவருகிறோம்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.