அரசியல் வன்முறை சம்பவங்கள்: திரிபுராவில் 3 போலீஸ் அதிகாரிகள் அதிரடி நீக்கம் தேர்தல் கமிஷன் உத்தரவு

அகர்தலா,

திரிபுராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள ஜிரானியா பகுதியில் கடந்த 18-ந்தேதி பேரணி நடத்திய காங்கிரசார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜோய் குமார் தாக்கப்பட்டார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய தேர்தல் கமிஷன், மாநில தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.யிடம் அறிக்கையும் கேட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வன்முறை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்காத 3 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு தேர்தல் கமிஷன் நேற்று உத்தரவிட்டது.

அதன்படி துணை மண்டல போலீஸ் அதிகாரி, ரனிர் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஜிரானியா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரை இடைநீக்கம் செய்யவோ அல்லது நீக்கவோ செய்யுமாறு கூறப்பட்டு உள்ளது. மேலும் திரிபுராவுக்கு 3 சிறப்பு பார்வையாளர்களையும் அனுப்பி வைத்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.