'வாரிசு' தயாரிப்பாளர் வசூல் அறிவித்ததை தவறு என்று சொன்னது சரியா ?

'வாரிசு, துணிவு' படங்களின் வசூல் சண்டை பத்து நாட்களாகியும் இன்னும் ஓயவில்லை. 'துணிவு' படத்தின் வசூல் என்னவென்று அதன் தயாரிப்பாளரான போனிகபூர் இதுவரை அறிவிக்கவில்லை. படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயன்ட் நிறுவனமும் அறிவிக்கவில்லை. ஆனால், 'வாரிசு' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் 7 நாட்களில் 210 கோடி என வசூல் தொகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம், ''தமிழக ரிலீஸ் உரிமையை ஒருவரும், வெளிநாட்டு உரிமையை மற்றொருவரும் பெற்றுள்ளனர். வாரிசு' படத்தின் வசூல் விவரம் 210 கோடி என்பது வாய்ப்பில்லாத ஒன்று,” என்று சில ஊடகங்களில் பேட்டி கொடுத்துள்ளார். யாருக்கு வினியோக உரிமை கொடுத்திருந்தாலும் 'வாரிசு' படத்தைத் தயாரித்த நிறுவனமே அதன் வசூல் தொகையை அறிவித்ததை திருப்பூர் சுப்பிரமணியம் இப்படி மறுத்துப் பேசியதன் அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

எத்தனை வினியோகஸ்தர்களுக்கு படத்தைக் கொடுத்திருந்தாலும் அவர்களிடமிருந்து வசூல் தொகையைக் கேட்டு அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்க முடியும். அப்பட 'வாரிசு' படத்தின் நிறுவனம் அறிவித்ததை சங்கத் தலைவராக இருந்து கொண்டு திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்தது 'வாரிசு' குழுவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

2019ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளிவந்த போது 'பேட்ட' படம் நன்றாக வசூலிக்கிறது என திருப்பூர் சுப்பிரமணியம் பேட்டி கொடுத்தது வைரலானது. ஆனால், பின்னர் 'விஸ்வாசம்' படம்தான் 'பேட்ட' படத்தை விடவும் அதிகம் வசூலித்து சாதனை புரிந்தது.

இப்போது 'வாரிசு' படத்திற்கு எதிராக அவர் பேசியிருப்பது விஜய் ரசிகர்களை கோபப்பட வைத்திருக்கிறது. திருப்பூர் சுப்பிரமணியம் நடத்தி வரும் தியேட்டர்களில் 'துணிவு' படம்தான் அதிகமாக வெளியிடப்பட்டுள்ளது எனவேதான் அவர் 'வாரிசு' வசூலுக்கு எதிராகப் பேசுகிறார் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.