கார் மோதி 8 கிமீ தூரம் தொங்கிக் கொண்டே சென்ற முதியவர்!!

கார் மோதி முதியவர் ஒருவர் 8 கிலோ மீட்டர் தூரம் காரின் வைப்பரை பிடித்து தொங்கிக் கொண்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் கிழக்கு சம்பாரண் மாவட்டம் பாங்க்ரா என்ற கிராமத்தில் முதியவர் ஒருவர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் சாலையை கடக்க முயன்ற போது கோர விபத்து நேரிட்டது.

தேசிய நெடுஞ்சாலையைக் கடக்கும்போது, வேகமாக வந்த கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் கார் மீதே விழுந்த அவர் வைப்பரை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.

காரில் வைப்பரை பிடித்து தொங்கிக் கொண்டிருந்த அவர், காரை நிறுத்துமாறு கூறினார். சாலையில் இருந்த மக்களும் காரை நிறுத்துமாறு ஓட்டுநரிடம் அறிவுறுத்தனர். ஆனால் ஓட்டுநர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

மக்கள் காரைப் பின்தொடர்ந்து வருவதைக் கண்ட ஓட்டுநர், 8 கிலோ மீட்டர் தூரம் சென்ற பிறகு பிரேக் அடித்து காரை நிறுத்தினார். இதையடுத்து முதியவர் காரிலிருந்து கீழே விழுந்தார். அப்போது அவர் மீது கார் ஏறி இறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அனைத்து சோதனைச் சாவடிகளையும் உஷார்ப்படுத்தி காரை பிடித்தனர். ஆனால் கார் ஓட்டுநர் மற்றும் உள்ளே இருந்தவர்கள் தப்பிச் சென்றனர்.

காரை கைப்பற்றிய காவல்துறையினர் அதன் உரிமையாளரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.