விழுப்புரம்: சாலையோர பாதுகாப்பு தடுப்பில் பாய்ந்த வேன்; வெளிநாட்டிலிருந்து திரும்பியபோது கோர விபத்து

புதுச்சேரி, சாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கர், சுஜாதா, சுகந்தன். இவர்களுடைய ஊரைச் சேர்ந்த உறவினர்கள், குழந்தை உட்பட 6 பேர் பிரான்ஸ் நாட்டிலிருந்து இன்று ஊருக்கு வருவதாக இருந்திருக்கிறது. எனவே, பிரான்ஸ் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர்களை ஊருக்கு அழைத்து வருவதற்காக, இந்த மூன்று பேரும் டெம்போ டிராவலர் மூலமாக நேற்று இரவே சென்னை விமான நிலையம் சென்றனராம். வாகனத்தை புதுச்சேரியைச் சேர்ந்த துரை என்பவர் இயக்கியிருக்கிறார்.

விபத்து

இந்த நிலையில், இன்று காலையில் சுரேஷ், விக்னேஷ்வரன், அலுயன், தமிழரசி, வினோதினி மற்றும் பெண் குழந்தை உட்பட 6 பேர் பிரான்ஸ் நாட்டிலிருந்து சென்னை வந்திருக்கின்றனர். அவர்களை அழைத்துக்கொண்டு 10 பேருடன் புதுச்சேரியை நோக்கி தேசிய நெடுஞ்சாலை வழியே டெம்போ டிராவலர் பயணப்பட்டிருக்கிறது. மதியம் 12:30 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், கேனிப்பட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் தூக்க கலக்கத்தினால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, நெடுஞ்சாலையின் இடப்புறமாக பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தகர தடுப்பில் வாகனம் அதிவேகமாக மோதியிருக்கிறது. இதில், அந்த தகர தடுப்பு வாகனத்தில் முன் பகுதியிலிருந்து கிழித்துக்கொண்டு பின் பகுதியை தாண்டி சென்றிருக்கிறது. இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு, புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

மேலும், ஒன்றரை வயது பெண் குழந்தை அபாயகரமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒருவருக்கு கால் பறிபோகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து கிளியனூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியவர்களை அழைத்துக்கொண்டு பயணித்தபோது, வாகனம் கோர விபத்தில் சிக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.