தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்தான பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களிலும் இணையதளத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்க வைக்கப்படுகிறது. அவ்வாறு எதிர்க்கட்சி பிரமுகர்களால் வைக்கப்படும் அவதூறு கருத்துக்களுக்கு எதிராக பல்வேறு சட்ட நடவடிக்கைகளை தமிழக அரசும், திமுக நிர்வாகிகளும் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட பாஜக நிர்வாகியை தமிழக காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜகவின் முன்னாள் நகர மன்ற தலைவர் ஜெகதீசன் என்பவர் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குறித்து தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அவருடைய பேரன் இன்பநிதி குறித்து அவதூறான கருத்துக்களை பேசிய வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ குறித்து திமுக வழக்கறிஞர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து பாஜக நிர்வாகி ஜெகதீசன் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.