'எச்சில் கையில் காக்கையை விரட்டமாட்டார்' ஓபிஎஸ்ஸை டோட்டலாக டேமேஜ் செய்த ஓஎஸ்எம்!

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கழக நிறுவனத் தலைவரும், பாரத ரத்னாவுமான எம்ஜிஆரின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு பொது கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த திருப்பூண்டி கடைவீதியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ் மணியன் கலந்து கொண்டு எம்ஜிஆர் கொண்டு வந்த நலத்திட்டங்களை பட்டியலிட்டு பேசினார்.

மேலும் அதிமுகவில் 4 அணி என்பதெல்லாம் இல்லை எனவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆளாக செயல்படுவதாகவும் கம்பெனிக்கு கூட ஆகமாட்டார்கள் எனவும் அவர் கூறினார். அதிமுகவில் மொத்தம் 2,642 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளதாகவும், ஓபிஎஸ் அணியில் எண்ணிப் பார்த்தால் நூறு பொதுக்குழு உறுப்பினர்கள் கூட இருக்கமாட்டார்கள் எனவும் 99.5% பேர் எடப்பாடி அணியில் உள்ளதாகவும் ஓ.எஸ்.மணியன் கூறினார்.

‘வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர்’,’எச்சில் கையில் காக்கை விரட்டமாட்டார்’ என்பன போன்ற பழமொழிக்கு பொருத்தமானவர் ஓ. பன்னீர்செல்வம் என்றும் ஓ.எஸ்.மணியன் குற்றம்சாட்டினார்.

விழாவில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், மாநில கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆசைமணி, மாவட்ட கழக இணை செயலாளர் மீனா ,மாவட்ட கழக துணை செயலாளர் மேரி டெலிமா லாசர் ,மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பால்ராஜ் ஒன்றிய கழக செயலாளர் எஸ். வேதையன்,பாலை செல்வராஜ், நகர செயலாளர்கள் தங்க கதிரவன், ஜேபி முரளி,சாம்சங் பிராங்கிளின், கழக பேச்சாளர்கள் அதிமுக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது:
அதிமுகவின் உள்ளே இருப்பவர்களாளும் , வெளியில் இருப்பவர்களாளும் ஏன் யாராக இருந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் எம்ஜிஆரின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு முன்னாள் உணவுத் துறை அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான காமராஜ் பேசும்போது, “அண்ணாதிமுகவிற்கு அழிவே கிடையாது. அதிமுகவின் உள்ளே இருப்பவர்களாளும் , வெளியில் இருப்பவர்களாளும் யாராக இருந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.

இது புரட்சித் தலைவர் எம்ஜிஆர் , புரட்சி தலைவி அம்மா கட்டிகாத்த இயக்கம். அண்ணன் எடப்பாடியார் வழி நடத்துகிற இயக்கம் . எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெல்லும். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக மிக பெரிய வெற்றியை பெரும் , எடப்பாடியார் அறிவிக்கின்ற வேட்பாளர் வெற்றி பெறுவார் இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்று காமராஜர் பேசினார்..

இந்த விழாவில் கோட்டூர் ஒன்றிய செயலாளர்கள் ஜீவானந்தம் , ராஜா.பா.சேட், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோபால் , மன்னார்குடி நகர செயலாளர் ஆர், ஜி, குமார் , கழக அமைப்பு செயலாளர் சிவா.ராஜா மாணிக்கம், தலைமை கழக பேச்சாளர்கள் உள்ளிட்ட அதிமுக, மாவட்ட , ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.