கோவை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மதுக்கரை மேட்டான்காடு பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி மதன்குமார் (23). இவருக்கும் கோவையை சேர்ந்த 17 வயதுடைய சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமி மதன் குமாரிடம் தனக்கும், 40 வயதுடைய ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய மதன்குமார் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 2020ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மதன்குமாரிடமிருந்து சிறுமியை மீட்டு பெற்றோருடன் ஒப்படைத்தனர். மேலும் கோக்சோ சட்டத்தின் கீழ் மதன்குமாரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மதன்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.