PM Modi Mann Ki Baat: 2023ஆம் ஆண்டில் தனது முதல் மன் கி பாத்தின் உரையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன. 29) நிகழ்த்தினர் நாட்டு மக்களுக்கு முன் உரையாற்றிய மோடி, இந்தாண்டு பத்ம விருது பெற்றவர்கள் குறித்து அனைவரும் படிக்க வேண்டும் என நாட்டு மக்களை வலியுறுத்தி பேசினார்.
மேலும், மின்னணு கழிவு மேலாண்மை உள்பட பல்வேறு துறைகள் சார்ந்து இன்றைய மன் கி பாத்தின் 97ஆவது எபிசோடில் பிரதமர் மோடி உரையாற்றினார். மன் கி பாத் 2023இன் முதல் எபிசோடின் சில முக்கிய குறிப்புகளை இங்கே காணலாம்.
“பழங்குடியின மக்கள், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் என பல தரப்பினருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் எழுச்சியூட்டும் கதைகளைப் படிக்குமாறு அனைத்து நாட்டு மக்களையும் கேட்டுக்கொள்கிறேன். டோட்டோ, ஹோ, குய், கூவி, மந்தா போன்ற பழங்குடி மொழிகளில் பணியாற்றிய பல முக்கியஸ்தர்கள் இந்த விருதுகளை பெற்றுள்ளனர்” என்று பிரதமர் பேசினார்.
India- The Mother of Democracy என்ற புத்தகம் குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்தப் புத்தகத்தில் சில அதிநவீனக் கட்டுரைகள் இருப்பதாகவும், அதில் சுவாரஸ்யமான தலைப்புகளின் கீழ் ஜனநாயகம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பிரதமர் மோடி ,”தமிழ்நாட்டில் ஒரு சிறிய – ஆனால் பிரபலமான கிராமம் – ஒன்று உள்ளது. அதன் பெயர், உத்திர்மேரூர். இங்கு 11 ஆயிரம், 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு உள்ளது. அது உலகையே வியக்க வைக்கிறது. இந்த கல்வெட்டு ஒரு சிறிய அரசியலமைப்பு போன்றது. ஜி-20 மாநாடு கூட்டங்கள் நடந்து வருகின்றன, ஜி-20 கூட்டங்கள் எங்கு நடந்தாலும், தினைகளால் செய்யப்பட்ட சத்தான மற்றும் சுவையான உணவுகள் அங்கு பரிமாறப்படுகின்றன” என்று கூறினார்.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, 2015இல் 80ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் இந்தியா 40ஆவது இடத்திற்கு முன்னேறியதாக நாட்டு மக்களுக்குத் தெரிவித்தார்.
மின்னணு கழிவுகளை முறையாக நிர்வகிப்பது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். “இ-கழிவுகள் முறையாக அகற்றப்படாவிட்டால், அது நமது சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆனால், அதை கவனமாகச் செய்தால், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டின் மூலம் பொருளாதாரத்திற்கு இது ஒரு பெரிய சக்தியாக மாறும்,” என்று அவர் கூறினார்.