உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி: அவைத் தலைவர் அவசரமாக அனுப்பிய சுற்றறிக்கை!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான சுற்றறிக்கை அனைத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் இன்று (பிப்ரவரி 5) அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தெரிவித்துள்ளளார்.

இரட்டை இலை சின்னம் கேட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையும் நேற்று (பிப்ரவரி 3) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதி சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

“ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளரை பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யுங்கள். பொதுக்குழுவில் ஓ.பன்னீர் செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரையும் அனுமதிக்க வேண்டும். அவைத் தலைவர் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். பொதுக்குழு முடிவு செய்யும் வேட்பாளரை அவைத் தலைவர் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.அவைத் தலைவரின் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழன்சாமி தரப்பில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதால் அவைத் தலைவர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அந்த அறிக்கையில், “ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலுக்கான, அதிமுக அதிகாரபூர்வ வேட்பாளரை, கட்சியின் பொதுக்குழு உருப்பினர்கள் சுற்றறிக்கை மூலமாக தேர்வு செய்வதற்கு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, அனைத்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கை சனிக்கிழமை (பிப்ரவரி 4) அனுப்பப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் மேற்படி சுற்றறிக்கையை முறையாக பூர்த்தி செய்து, அதனை 5.2.2023 அன்று இரவு 7 மணிக்குள், சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் என்னிடம் சேர்த்துவிடுமாறு அன்புடன் கேட்க்கொள்கிறேன்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.