சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கர்நாடக பாஜக இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்: தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவிப்பு

சென்னை: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக தேர்தல் பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இணை பொறுப்பாளராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆட்சியை பிடிக்க 113 இடங்களை கைப்பற்ற வேண்டும்.

ஆனால் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 14 மாதங்களில் ஆட்சி கலைக்கப்பட்டு பாஜக ஆட்சியை பிடித்தது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநில சட்டபேரவை தேர்தலை கவனிப்பதற்கு ஒன்றிய  கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாஜவின் பொறுப்பாளராக அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் பாஜகவின் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை கர்நாடக மாநிலத்தில் 9 ஆண்டுகள் பணிபுரிந்தவர். கர்நாடக மக்களுக்கு ஏற்கனவே பரிச்சயமானவர் என்பதால் அவருக்கு அந்த ெபாறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.