சொல்லாமல் நெஞ்சள்ளி போன `வாணியம்மா’! – ரசிகை பகிரும் நினைவலை| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

தன் அழகான மென்மையான குரலால் நம்மை ஈர்த்து ஒரு நொடி நம்மை ஆகாயத்தில் பறக்க விடும் அற்புத மங்கை காற்றில் கலந்து இதயத்தை கனக்க வைத்துவிட்டார். தமிழ்த் திரையுலகில் மட்டுமல்ல இந்திய திரை உலகிலும் மறக்க முடியாத குரல்.

வாணி ஜெயராம் அவர்கள் 1973 ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் நுழைந்தார். எஸ் எம் சுப்பையா இசையமைத்த “தாயும் சேயும்” படத்தில் முதன்முதலாக ஒரு பாடலைப் பாடினார் ஆனால் அந்தப் படம் வெளியாகவில்லை. பிறகு சங்கர் கணேஷ் இசையில் “வீட்டுக்கு வந்த மருமகள்”படத்தில் டி எம் எஸ் உடன் சேர்ந்து “ஓர் இடம் உன்னிடம் என்ற பாடலை” பாடினார். அவர் பாடி தமிழில் வெளியான முதல் பாடல் இது.

ஆனால் 1974இல் எம் எஸ் வி இசையில்” தீர்க்க சுமங்கலி” படத்தில் வாலி எழுதிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடல் தான் அவரை தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் அறிமுகம் செய்தது.

பாடகி வாணி ஜெயராம்

1975 ஆம் ஆண்டில் தமிழில் முன்னணிப் பாடகியாக உயர்ந்தார் “அபூர்வ ராகங்கள்” படத்தில் அவர் பாடிய ,”ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்’ பாடல் மற்றும் “கேள்வியின் நாயகனே” ஆகிய பாடல்களுக்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது .இதற்குப் பிறகு எம் எஸ் வி ,சங்கர் கணேஷ், கே வி மகாதேவன் ,விஜயபாஸ்கர், வி குமார் போன்றவர்களின் இசையமைப்பில் தொடர்ந்து பாடல்களை பாடினார்.1980 ஆம் ஆண்டில் கே வி மகாதேவன் இசையில் ‘சங்கராபரணம்’ படத்தில் அவர் பாடிய பாடலுக்கு இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகி விருது மீண்டும் கிடைத்தது.

இசைஞானி இசையில் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படத்தில் அவர் பாடிய “நானே நானா” பாடலுக்கு (படத்தில் நாயகி மது அருந்தி போதையில் பாடுவது போல் காட்சி அமைப்பு. அதை மிக அழகாக தன் குரலில் வெளிப்படுத்தி இருப்பார் வாணியம்மா )எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல். தமிழக அரசு சிறந்த பின்னணி பாடகிக்கான விருது வழங்கியது.

வாணி ஜெயராம்

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் குஜராத்தி ஒடியா என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் சுமார் 10,000 கற்கும் மேற்பட்ட திரையிசை பாடல்களைப் பாடி இருக்கிறார். வாணியம்மா மதங்களைக் கடந்து பக்தி பாடல்களையும் தனி ஆல்பங்களில் பாடியிருக்கிறார்.

எந்த பாடலை எடுத்துக் கொண்டாலும் அதில் நயமும் இனிமையும் கைகோர்த்து பாடுவது இவருக்கு கைவந்த கலை. குரலின் இனிமை மட்டுமல்ல கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளையும் தனது குரலை மாற்றாமலேயே கொண்டு வந்துவிடும் திறமை கை வரப் பெற்றவர்.

“தங்கப்பதக்கத்தில்” இவர் பாடிய ‘தத்திச் செல்லும் முத்துக்கண்ணன் சிரிப்பு அள்ளித்தாலாட்டும் அன்னைபா பெற்ற மதிப்பு”என்ற பாடலை யாராவது மறக்க முடியுமா? “அந்தமான் காதலி”யில்..’நினைவாலே சிலை செய்து’,” புனித அந்தோனியார்” திரைப்படத்தில் ,’மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்’, “நெஞ்சமெல்லாம் நீயே” திரைப்படத்தில்,’ யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது’,”( வேறு யார் வாணி அம்மாவின் குரல் தான் நம் நெஞ்சை அள்ளிப் போனது) கண்ணை மூடி இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

வாணி ஜெயராம்

பாடல் அப்படியே நம் தேகத்தை வருடி இதயத்தில் உள் நுழையும். எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்டவுடன் மனம் அமைதியாக மாறிவிடும். வார்த்தைகளை மிகவும் அருமையாக துல்லியமாக பாடி இருப்பார் வாணியம்மா.

இது போன்ற தனி பாடல்களில் வாணியவர்கள் சொல்லாமலேயே நம் ‘நெஞ்சத்தை அள்ளி’ எடுத்துச் சென்று விடுவார். “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” படத்தில் அவர் பாடிய , ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம்’ இந்தப் பாடலை இவரை தவிர மிக அழகாக வேறு யாராலும் பாட முடியாது!

இயற்கையே பாடுவது போல் மிகவும் அருமையாக இருக்கும் அப்படியே மயக்கம் வருவதைப் போல் ஒரு அழகிய உணர்வு இந்த பாடலைக் கேட்கும் போது …(ஆட்சேபனை இல்லனா… இந்த பாடலை கண்டிப்பாக கேட்கவும்)தங்க மகன்” படத்தில் ‘வா வா பக்கம் வா’,”என்ற பாடலை இளமை ததும்ப பாடி இருப்பார். இளமை ஊஞ்சலாடுகிறது” படத்தில் ‘ஒரே நாள் உன்னை நான்’… 70 ஸ் காதலர்களின் தேசிய கீதம் இந்தப் பாடல்(எஸ்,பி.பி அவர்களும் வாணியம்மாவும் மிகவும் மென்மையாக இந்தப் பாடலை காதலுடன் பாடுவர் .காதல் நெஞ்சங்களை ஈர்க்கும். காதல் ரசனையை மிக அழகாக தன் குரலில் வெளிப்படுத்தி இருப்பார் வாணி.. இந்தப் பாடல் இன்றைக்கும் எங்கு ஒலித்தாலும் ஒரு சில நிமிடங்கள் நம்மை அங்கேயே நிற்க வைத்து நம் மனதை நமது இளமைக் காலத்திற்கு இழுத்துச் செல்லும் என்றால் மிகை இல்லை.

வாணி ஜெயராம்

இப்படி வாணியம்மா பாடிய ஒவ்வொரு பாடல்களும் ஒவ்வொரு சரித்திரம். இந்தப் பாடல்களை எல்லாம் மறக்கவே முடியாது. குறிப்பாக கடலில் அசைந்தாடும் படகைப் போல் உள்ளத்தை அசைக்கும் வாணியம்மாவின் குரலில்” பொங்கும் கடலோசை”( மீனவ நண்பன் ) பாடலை முணுமுணுக்காக உதடுகளே இல்லை எனலாம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும். அவர் பாடிய ஒவ்வொரு பாடல்களும் இந்த யுகம் உள்ளவரை ஒலித்துக் கொண்டே இருக்கும் காற்றில் கலந்த ஏழு ஸ்வரங்களுக்கு இதய அஞ்சலி!

என்றென்றும் அன்புடன்

ஆதிரை வேணுகோபால்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.