விவசாயிகளுக்கு கை கொடுக்க தவறிய தமிழக அரசு: ஜிகே வாசன் குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜிகே வாசன், திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இரண்டு மாதத்திற்கு முன்பு மயிலாடுதுறை, சீர்காழி பகுதி பெருத்தளவில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. நேரடியாக சென்று ஆய்வு செய்து தமிழக அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய தவறிவிட்டது. டெல்டா மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். ஆனால், ஆபத்தான நேரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசு இருக்க தவறிவிட்டது.” என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். விவசாயிகளை வஞ்சிக்கக் கூடிய செயல்களில் இந்த அரசு செயல்பட கூடியது வருத்தம் அளிக்கிறது. கடந்த 19 மாத திமுக ஆட்சி குறைகளை பற்றி பேசினால் போதும் அதுவே ஈரோட்டில் அதிமுகவின் வெற்றிக்கு வழிவகுத்து கொடுக்கும்.” என்றார்.

சென்னை கடற்கரையில் கலைஞருக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜிகே வாசன், கலைஞரின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலே அந்த இயக்கத்தின் நடவடிக்கைகள் அமையும் என நம்புவதாகவும் மத்திய, மாநில அரசு சுற்றுச்சூழல் இவைகளுக்கெல்லாம் முறையாக சரியாக, அனுமதி ஒப்புதல் பெற்று அவர்கள் மக்கள் மத்தியிலே இருக்கின்ற நல்ல கருத்தை கேட்டு சரியான முடிவு எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.