வாரிசு கோட்டைவிட்டதை கச்சிதமாக பிடித்த ’வாத்தி’! – வெளியானது முதல்நாள் வசூல் நிலவரம்

தனுஷின் ‘வாத்தி’ திரைப்படம் முதல்நாளில் மட்டும் 14.85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘நானே வருவேன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. தெலுங்கில் ‘சார்’ என்றப் பெயரில் நேற்று வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சம்யுக்தா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கல்வி வியாபாரமாகிவிட்டதை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழ்நாட்டில் லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோவும், வட இந்தியாவில் சோனி பிக்சர்ஸும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் இந்தப் படம், 5.44 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ்நாட்டில் இந்தப் படம் வெளியாகியிருந்தது. இதற்கு இணையாக கிட்டத்தட்ட தெலுங்கில் 4.52 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 1.25 கோடி ரூபாயும், கேரளாவில் 0.2 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 3.25 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. மொத்தமாக முதல் நாளில் மட்டும் 14.85 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ‘வாத்தி’.

தெலுங்கில் இந்தப் படத்தின் இயக்குநர் இயக்கியிருந்த ‘தோழி பிரேமா’, ‘மிஸ்டர் மஞ்சு’, ‘ரங் தே’ உள்ளிட்டப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்ததால், தெலுங்கில் தமிழ்நாட்டிற்கு இணையான வசூலைப் பெற்றுள்ளது. மேலும், விஜய்யின் ‘வாரிசு’ போல் அல்லாமல் ‘வாத்தி’ படத்திற்கு கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதும் ஒரு காரணம். சொல்லப்போனால் முழுக்க முழுக்க தெலுங்குப் படமாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது. தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் வசூலை, மொத்தமாக ‘சார்’ படம் அள்ளியுள்ளது. மேலும், இந்தியில் நேற்று வெளியான கார்த்திக் ஆர்யனின் ‘Shehzada’ படத்தின் வசூலை ‘வாத்தி’ திரைப்படம் முந்தியுள்ளது.

தெலுங்கில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற அல்லு அர்ஜூனின் ‘ஆல வைகுந்தபுரம்லோ’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீ – மேக் தான் Shehzada’  திரைப்படம். இந்தப் படம் முதல்நாளில் 7.25 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்த நிலையில், ‘வாத்தி’ திரைப்படம் அந்தத் திரைப்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்துள்ளது. இதேபோல் தனுஷின் அண்ணனும், நடிகரும், இயக்குநருமான செல்வராகவனின் நடிப்பில் வெளியான ‘பகாசூரன்’ திரைப்படம் முதல் நாளில் 1 முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.