ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேனாகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூக மக்களை பற்றி அவதூறாக பேசியது சர்ச்சையை உருவாக்கி உள்ளது. சீமானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியும் அருந்ததியர் சமூக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரசாரத்துக்கு வருபவர்களை விரட்டியடிக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. தொடர் எதிர்ப்புகளால் நாதகவினரின் தேர்தல் பிரசாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
நாளை முதல் 25ம் தேதி வரை சீமான் பிரசாரம் மேற்கொள்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் எதிர்ப்பால் திட்டமிட்டபடி அவரது பிரசாரம் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், சீமானின் சர்ச்சை பேச்சை கண்டித்து இன்று விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ், தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சமூக நல இயக்கங்கள் உள்பட 25க்கும் மேற்பட்ட அமைப்புகள் சார்பில் ஈரோட்டில் இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.