நடிகையிடம் அத்துமீறல் பிரியங்காவின் உதவியாளர் மீது வழக்கு

மீரட்: நடிகை அர்ச்சனா கவுதமிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவின் தனி உதவியாளர் சந்தீப் சிங் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச அழகி பட்டத்தை வென்றவர் அர்ச்சனா கவுதம். இவர், கடந்த 2022ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் ஹஸ்தினாபூர் தனிதொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றவர். காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா, அர்ச்சனாவை சந்திக்க விரும்புவதாகவும், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டுக்கு வரும்படியும் அவரது தனி உதவியாளர் சந்தீப் சிங் அழைப்பு விடுத்துள்ளார். அங்கு சென்ற அர்ச்சனாவிடம் சந்தீப் தவறாக நடக்க முயன்றதுடன், அர்ச்சனாவை சாதி ரீதியாக அவதூறாக பேசியதாகவும், அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சந்தீப் சிங் மீது அர்ச்சனாவின் தந்தை கவுதம்புத்தா என்பவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பர்த்தாபூர் போலீசார் சந்தீப் சிங் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.