பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தர்மபுரியில் பள்ளி சூறையாடப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அதில்,”பள்ளி விடுமுறை காலங்களில் இங்க் அடித்து விளையாடுவோம். அதை தான் இந்த மாணவர்கள் மேசையை அடித்து உடைத்து விளையாடுகிறார்கள்.
எச்சரிக்கை மட்டும்தான்
தர்மபுரியில் பள்ளி மாணவ மாணவிகள் பெஞ்சுகளை அடித்து உடைத்தது தொடர்பாக சிஇஓ பள்ளிக்கு கடிதம் எழுத சொல்லி அறிவுறுத்தி இருக்கிறோம். அந்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அவர்களின் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு
மாணவர்களின் பெற்றோர்களை வரச் சொல்லி எச்சரிக்கை கொடுக்க உள்ளோம்.
பொது சொத்துகளை சேதப்படுத்தக் கூடாது என்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார். ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு அவர்களுடன் பத்து மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி சம்பவம்
முன்னதாக, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அமானிமல்லாபுரம் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவ – மாணவிகள் பள்ளி வகுப்பறையில் உள்ள மேசை, நாற்காலி, மின்விசிறி ஆகியவற்றை உடைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 11, 12ஆம் வகுப்புக்கான செய்முறை விளக்கம் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது.
தேர்வு முடிந்த கடைசி நாளான நேற்று மாணவ – மாணவிகள் பள்ளி வகுப்பறையில் உள்ள பெஞ்ச், டெஸ்க் , ஸ்விட்ச், மின்விசிறி ஆகிய பொருட்களை அடித்து உடைத்து அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இது குறித்து தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் தந்தவுடன் சம்பவத்தில் ஈடுபட்ட 5 மாணவ மாணவர்களை சஸ்பெண்ட்டுள்ளதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.