”சர்வாதிகார போக்குடன் எங்களை நீக்கினர்” – நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வாதம்!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மூன்று வழக்குகளும் நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர் பி எஸ் ராமன் ஆஜராகி, கட்சி சட்ட விதிகளை பின்பற்றாமலும், விதிகளின்படி தங்கள் தரப்பு விளக்கம் கேட்காமலும், சர்வாதிகார போக்குடன் தங்களை நீக்கி உள்ளதாக வாதிட்டப்பட்டது.
image
வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் தரப்பில்..
“இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற பின் எதற்காக சட்டமன்றத்தில் கட்சி சாராத உறுப்பினராக இருக்க வேண்டும். கட்சியில் இருந்து நீக்கம் செய்ய பொதுக்குழுவுக்கு கட்சி விதிகள் அதிகாரம் ஏதும் வழங்கவில்லை. கட்சியில் இருந்து நீக்கும் முன் குற்றச்சாட்டு அறிக்கை வழங்கியிருக்க வேண்டும்.  நோட்டீஸ் கொடுக்கும் முன் சஸ்பெண்ட் தான் செய்ய முடியும்.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைப்பாளருகும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் பொதுக்குழு பரிந்துரை தான் செய்ய முடியும் என்பதால், கடந்த ஆண்டு ஜூலை 11க்கு முந்தைய நிலை நீடிக்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது. வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுசெயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றத்தை நாட அனுமதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
மனோஜ் பாண்டியன் தரப்பில்..
மனோஜ் பாண்டியன் தரப்பில் வழக்கறிஞர் சலீம் ஆஜராகி, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடியை இன்னும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீடிப்பதாகவும், அப்படி இருக்கும்போது, இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசமி பதில்மனு தாக்கல் செய்திருப்பதாக குறிப்பிட்டார். சட்டமன்றம் மார்ச் 20ஆம் தேதி கூடுவதால், இதுசம்பந்தமாக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியும் பதில் இல்லை என்றும், வழக்கு நிலுவையில் உள்ளதால் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அதிமுக சார்பில்..
அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி, மனோஜ் பாண்டியன் வழக்கில் ஜூலை 11 தீர்மானங்களுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டதாகவும், எதிர்தரப்பு வாதங்களை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி கடந்த முறை தெரிவித்ததாகவும், பொதுக்குழு அதிகாரத்தை பயன்படுத்தியே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக வாதிட்டார்.
வாதங்களை கேட்டபின் நீதிபதி உத்தரவு
இதையடுத்து வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரின் வழக்குகளில் அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 2 வாரங்களில் பதில் மனுதாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம் பதில் மனுதாக்கல் செய்ய அடுத்த ஒரு வாரத்தில் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம், பிரபாகர் ஆகியோர் விளக்க மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.