மகாராஷ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீஸ் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக 8 பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், 9 வழக்குகள் பதிவு செய்யப்ப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழு தலைவர்கள் (TLs) கைது செய்யப்பட்டுள்ளனர். இப்புகார்கள் குறித்து விசாரிக்க மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அக்குழு நடத்திய விசாரணையில் பெண் ஊழியர்களை தவறான முறையில் தொடுதல், பின்தொடருதல் மற்றும் ஆபாசமான கருத்துக்களைக் கூறுதல் போன்ற செயல்கள் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. அதோடு ஊழியர்களை இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தி இருக்கின்றனர்.
சில ஊழியர்களை மாட்டிறைச்சி உண்ண கட்டாயப்படுத்தியதாகவும், பெண்களை புர்கா அணிய வற்புறுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தபோது, நிறுவனத்தின் மனிதவள மேலாளர் (HR) அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவற்றை மறைக்க முயன்றுள்ளார். அதோடு அவரும் இக்குற்றச்சாட்டுக்கு துணைபோய் இருக்கிறார். விசாரணை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலங்கள் மூலம் மிகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
குற்றம்சாட்டப்பட்ட ஆறு குழுத் தலைவர்கள் மற்றும் மனிதவள நிர்வாகி நிதா கான் ஆகியோர், சக ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டி இருக்கின்றனர். அதோடு முறையற்ற பாலியல் அத்துமீறல்கள் மற்றும் இஸ்லாமிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறு தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வந்துள்ளனர்.
தங்கள் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்தும் வகையில் அவர்கள் பேசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இப்புகாருக்கு உள்ளான குழுத் தலைவர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அதிகாரி நிதா கான் தலைமறைவாகிவிட்டார். நிதா கான் ஊழியர்களை தேர்வு செய்வதில் முஸ்லிம்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்துவந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதமே இது தொடர்பாக போலீஸாரின் கவனத்திற்கு வந்தது. உடனே உண்மையை தெரிந்து கொள்ள போலீஸார் நூதன முறையைப் பின்பற்றினர். நாசிக் டி.சி.எஸ் அலுவலகத்தில் தங்களது ஊழியர்கள் 4 பேரை அங்கு பணியாளர்களாக போலீஸார் சேர்த்துவிட்டனர். அந்த போலீஸார் அந்த அலுவலகத்தில் தூய்மை தொழிலாளர்களாகப் பணியாற்றி அங்கு பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் பேசி உண்மையை படிப்படியாக தெரிந்து கொண்டனர்.
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாட்ஸ்அப் விவரங்களை ஆய்வு செய்தபோது இந்த மதமாற்ற முயற்சியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருக்கும் என்று தெரிகிறது. மலேசியாவைச் சேர்ந்த மத குரு ஒருவருக்கு இதில் தொடர்பு கொண்டு இருப்பதாக வாட்ஸ்அப் மூலம் தெரிய வந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த இம்ரான் என்ற நபரின் பெயர், வாட்ஸ்அப் (WhatsApp) உரையாடல்கள் இந்த வழக்கில் அடிபட்டுள்ளது. அவர் ஒரு மதப் போதகராக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
வீடியோ கால்கள் (Video Calls) மூலம் அவர் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அந்த அழைப்புகளின் போது, வெளிநாடுகளுக்குச் சென்றால் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை மற்றும் சிறந்த வாழ்க்கை முறை கிடைக்கும் என்பது குறித்து அவர் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது.

அவரது உண்மையான அடையாளம் மற்றும் இந்தச் சதித்திட்டத்தில் அவரது பங்கு என்ன என்பது குறித்து இன்னும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பிடிபட்ட குழுத் தலைவர்களின் வாட்ஸ்அப்பில் அழிக்கப்பட்ட தரவுகளை தடயவியல் நிபுணர்கள் மூலம் மீட்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இக்கும்பல் அங்கு பணியாற்றும் 18 முதல் 25 வயது வரையிலான இந்து பெண் ஊழியர்களை குறிவைத்து இது போன்ற மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இருந்தே இது நடந்து வந்திருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.