போர் தொடங்கி ஓராண்டு கடந்த நிலையில் முதல் முறையாக உக்ரைன் எல்லைக்குள் சென்ற ரஷிய அதிபர் புதின் – மரியுபோல் நகரில் ஆய்வு

மாஸ்கோ,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் இன்று 389-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இதனிடையே, இந்த போரில் கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார்.

போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு இன்று ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார். மரியுபோல் நகரை ரஷிய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியுபோல் நகர் ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புதின் திடீர் பயணம் மேற்கொண்டார்.

ரஷிய அதிபர் புதினின் இந்த பயணம் உக்ரைன் – ரஷியா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.