ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி; திருமாவிற்கு என்ன பிரச்சினை? குமாரசாமி சொன்ன சீக்ரெட்!

சேலத்திற்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மாநில தலைவர் குமாரசாமி வருகை புரிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ் சங்க காரிய கர்த்தாக்கள் சீருடையுடன் கட்டுக் கோப்பாக ஊர்வலத்தில் ஈடுபடுவர். இது சங்கம் ஆரம்பித்த நூறு ஆண்டுகளில் 70 – 80 ஆண்டுகளாக நாடு முழுவதும் நடந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல ஆண்டுகளாக ஊர்வலம் நடக்கிறது.

அனுமதி கொடுத்த

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவரே நமக்கு பலமுறை அனுமதி கொடுத்துள்ளார். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பாலக்கோடு உள்ளிட்ட நகரங்களில் கூட நமது அணிவகுப்பு நடந்துள்ளது. இது கட்டுக் கோப்பான ஊர்வலம் என்று போலீசாரும், பொதுமக்களும் பாராட்டினர். ஆனால் தற்போது ஆர்.எஸ்.எஸ் பேரணியை தமிழ்நாட்டில் நடத்தக் கூடாது என்று சில இந்து விரோத சக்திகள் தூண்டி விடுகின்றன.

தமிழ்நாடு அரசு தடை

இதன் பேரில் தான் பேரணிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினோம். அதில், நான்கு சுவர்கள் அடங்கிய அரங்கில் நடத்த அறிவுறுத்தினர். ஆனால் வீதிகள் வழியாக ஊர்வலம் நடத்த கோரிக்கை விடுத்தோம். அதற்கு உயர் நீதிமன்ற அமர்வு அனுமதி அளித்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அச்சம்

விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வளர்ச்சியால் தனது அரசியல் முன்னேற்றம் பாதிக்கப்படுமோ என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அச்சப்படுகிறார். விரைவில் திருமாவளவனை சந்திக்க உள்ளேன். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பற்றி அவரிடம் தெளிவுபடுத்தினால் நிச்சயம் பாராட்டுவார்.

ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி

தனிப்பட்ட முறையில் இந்த இயக்கத்தை எதிர்க்க அவரிடம் எதுவும் இல்லை என்றார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஆன்லைன் மூலமாக நாடு முழுவதும் 7 லட்சத்து 25 ஆயிரம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் 4,848 பேர் அடங்குவர். புதிய உறுப்பினர் சேர்க்கை மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எழுச்சி பெற்றுள்ளது.

பன்னாட்டு பயிற்சி

இந்த இயக்கத்தின் சார்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை காலத்தில் பன்னாட்டு பயிற்சி மையம் நடத்தப்படும். ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தற்போது வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்கள், முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்து வருவதாக தெரிவித்தார்.

கேந்திர வித்யாலயா பள்ளிகள்

மத்திய அரசால் நடத்தப்படும் கேந்திர வித்யாலயா பள்ளியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய கல்வி சேவையை தமிழகத்தில் வர விடாமல் தடுத்து வருகின்றனர். இதற்கு முழு பொறுப்பு தமிழ்நாடு அரசு தான் எனக் குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.