பொன்னியின் செல்வன் படத்திற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில், அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி அதே பெயரில் இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள படத்தில், வரலாற்றை திரித்து இயக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய கதாப்பாத்திரமான வந்தியத்தேவன் பெயரை தவறாக பயன்படுத்தியதுடன், தனது சுய லாபத்திற்காக வரலாற்றை தவறாக பயன்படுத்தி உள்ளார் என்றும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்கும்போது, அது வரலாற்றின் அடிப்படையிலான திரைபடம் என்பதால், படம் எடுக்கும் முன்பு உரிய ஆராய்ச்சி மேற்கொண்டிருக்க வேண்டும் என்றும் வரலாற்றில் உள்ள உண்மை பெயர்களை கல்கியும் பயன்படுத்தி உள்ள நிலையில், போர் தந்திரங்களில் சிறந்து விளங்கிய சோழர்களுக்கு அவமதிப்பு ஏற்படுத்தும் வகையில் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை திரித்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மற்றும் இந்திய தொல்லியல் ஆய்வு துறை ஆகியவற்றிடம் அளித்த புகார்களில் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என மனுதாரருக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், இல்லை எனத் தெரிவித்தார். தொடர்ந்து நீதிபதிகள், நாவலை படிக்காத நிலையில் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் எனவும் பொன்னியின் செல்வன் படம் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே தவிர, வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படவில்லை எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.